Saturday, March 7, 2009

தமிழினம் அழிவதே மேல்!

நாம் ஜப்பானியப் பொருட்களை மதிக்கிறோம். அண்மைக் காலங்களில் சீனப் பொருட்களையும் அரவணைக்கத் தொடங்கி விட்டோம். ஆனால் ஜப்பானியர்களோ, சீனர்களோ தமிழர்களின் உயிரைத் துரும்பாகவும் மதிப்பதாகத் தெரியவில்லை. பெரும்பான்மை சிங்களர்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக புத்த மதவெறி பிடித்த ஜப்பானியர்கள் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று அறிந்தும் தெரிந்தும் தங்களது புத்த சகோதரர்களான இனவெறிச் சிங்களர்களுக்குத் தாராளமான பணத்தை வாரி வழங்குகிறது. சீனர்களோ இந்தியப் பெருங்கடலில் மேலாதிக்கம் செய்யும் பொருட்டு இலங்கையில் கப்பற்தளம் அமைக்க சிங்கள அரசின் ஒத்துழைப்புக்காக படுபயங்கரமானப் போர் ஆயுதங்களை வாரி வழங்குவதோடு தமிழர்களின் இனப்படுகொலையை ஐ.நா-வில் விவாதப் பொருளாக எடுக்க எந்த நாடாவது முன்மொழியும் போது தனக்குள்ள சிறப்பு வீடோ அதிகாரத்தால் விவாதம் நடக்காமல் முறியடித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளும், தாய்மார்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டும் உடல் சிதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வரும் இவ்வேளையில் ஜப்பான் சிங்கள இனவெறி அரசுக்கு 350 மில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட இரண்டாயிரம் கோடி ரூபாய்) வழங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புத்தரும் காந்தியும் பிறந்ததாகப் பிதற்றிக் கொள்ளும் தில்லிப் பேரரசோ வட்டியில்லாக் கடனாக தமிழன் கட்டிய வரிப்பணத்தையே 4500 கோடி அளவுக்கு தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்த இனவெறி பிடித்தச் சிங்கள அரசுக்குத் தாரை வார்த்துள்ளது. தமிழன் என்ன கிள்ளுக்கீரையா? அப்படித்தான் தெரிகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் போக்கைப் பாருங்கள்! உணர்ச்சி கெட்ட முண்டங்கள் போல் சினிமாவிலும், சில்லறை அரசியலிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

இந்த இனமா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியப் பெருங்கடல் அனைத்தையும் ஆண்டு உலக வாணிகத்தில் கொடிகட்டிப் பறந்த்தது என்று ஐயமுறத் தோன்றுகிறது? 15-ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த சீன மாலுமி ஜெங்-கே (Zheng He) காலேயில் (Galle) ஒரு கல்வெட்டை நிறுவிச் சென்றான். அக்கல்வெட்டு மூன்று மொழிகளில் உள்ளது. அந்த மூன்று மொழிகள் எவையெல்லாம் தெரியுமா? பாரசீகம், சீனம் மற்றும் தமிழ். அரபியர்களும், சீனர்களும் இதர உலகநாடுகளோடு வணிகத் தொடர்பு கொள்வதற்கு தமிழனின் கடற்படைப் பிரிவுகளே பாதுகாப்பு அளித்தன, அதனாலேயே கிழக்கு ஆசியாவிற்கும், மேற்காசியாவிற்கும் வாணிகமே நிலைபெறத் தொடங்கியது என்பதை அறியும் போது இன்றுள்ள தமிழர்கள் அதே தமிழர்களின் வழியில் வந்தவர்கள் தானா என நம்ப முடியவில்லை. வாணிகக் கப்பல்கள் இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜயப் பேரரசின் தூண்டுதலால் கொள்ளையடிக்கப்பட்ட போது அவ்வரசனைத் தண்டிக்கவும், வாணிகத்திற்கானக் கடல்வழிகளைக் காப்பதற்கும் 1025-ம் ஆண்டு இராஜேந்திர சோழன் ஒரு பெரும் கப்பற்படையை அனுப்பினான். அப்படை ஸ்ரீவிஜயப் பேரரசைத் தோற்கடித்தது மட்டுமல்லாது அவ்வரசனையும் சிறைபிடித்துத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தது. அவ்வரசன் தான் செய்த தவறுகளுக்கு ஈடாகப் பொன்னும் பொருளும் வழங்க ஒப்புக்கொணடதோடு சோழர்களின் மேலாதிக்கத்தையும் ஏற்றுக் கொண்டு ஆண்டுதோறும் திறை செலுத்த ஒப்புக் கொண்டான். தமிழர்களின் வியாபாரக் கலங்களுக்கு அதுவரை தொல்லை கொடுத்து வந்த கம்போடிய அரசனோ தமிழர்களின் இராணுவ பலத்தைக் கண்டு அஞ்சி சோழ மன்னனுக்குப் பரிசாக ஒரு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த தேரை அனுப்பினான். இன்றைய மலேசியா மற்றும் இந்தோனேஷியாப் பகுதிகளை வென்றதை அடுத்தே இராஜேந்திரச் சோழனுக்குக் 'கடாரம் வென்றான்' என்ற அடைமொழி வழங்கப்பட்டது. சீனாவுக்குச் சென்ற தமிழ் மன்னர்களின் தூதுவர்கள் சீரும் சிறப்புடனும் நடத்தப்பட்டார்கள் எனவும் தமிழர்களின் கடல் வாணிகத்தின் மூலம் தாங்களும் பயன்பெறும் பொருட்டு சீன அரசர்கள் தூதுவர்கள் மூலம் தமிழ் மன்னர்களுக்குக் கப்பல் கப்பலாகப் பரிசுப் பொருட்கள் அனுப்பியதாகவும் வரலாறு சொல்கிறது. குமரி முதல் வங்கம் வரையும், இலங்கைத் தீவு முழுவதும், தென்கிழக்காசியா முழுவதும் ஒரு பரந்து கிடந்தப் பேரரசை ஆண்ட தமிழ்ச் சமூகத்திற்கு இன்று ஏற்பட்ட நிலையை நினைத்தால் ஐயகோ! நெஞ்சு பதைபதைக்கிறது. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவன் வெறும் 30 மைலுக்கப்பால் கொல்லப்படுகிறான், தமிழச்சி என்ற ஒரே காரணத்திற்காக ஒருத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அவயங்கள் சிதைக்கப்படுகிறாள், தமிழ்க் குழந்தைகள் என்ற ஒரே காரணத்திற்காகப் பள்ளியில் காலை அணிவகுப்பில் நிற்கும் குழந்தைகள் குண்டு வீசிக் கொல்லப்படுகிறார்கள், இவர்கள் அனைவரும் இப்போது ஒரு வாய்க் கஞ்சிக்காகத் தட்டைத் தூக்கிக் கொண்டுப் பிச்சைக்காரர்கள் போல் வரிசையில் நிற்கிறார்கள். இதை ஏனென்று கேட்கத் துப்பில்லாதவர்கள் எவனோ விளங்காதவனிடம் எல்லாம் போய் 'கருணை கொள்ளுங்கள்' என்று மன்றாடாத குறையாக மனு கொடுக்கிறார்கள். அதையே தொடர்ந்து செய்ய வேண்டுமென்று சொல்கிறார்கள். இந்தப் பிச்சை கேட்கும் ஈனப் பிழைப்புக்குப் பதிலாகத் தமிழினமே அழிந்து போவது மேல்! இராஜராஜ சோழனுக்கும் இராஜேந்திர சோழனுக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் நெடுஞ்சேரலாதனுக்கும் இரும்பொறைக்கும் வாரிசாக வந்தவர்கள் உயிர்ப் பிச்சை கேட்டு மண்டியிடாத இனமே உலகில் இல்லை என்ற அவப் பெயருக்கு உட்படாமல் தமிழினம் அழிவதே மேல்.

Monday, March 2, 2009

ஈழத் தமிழர் பிரச்சனையும் பூகோள அரசியலும்

இன்று ஈழத்தமிழர் மீது திணிக்கப்பட்டுள்ள கொடூரமான இனப்படுகொலைப் போருக்கு என்ன காரணம்; எதற்காக இந்தியா இந்தத் தமிழின அழிப்புக்கு ஆசியும் ஆதரவும் அளிக்கிறது என்பது குறித்துப் பலரும் பலவாறாகக் கருத்துக் கூறி வருகின்றனர். இந்தப்போரே இந்தியாவின் போர்தான் என்றும்; இராஜீவின் சாவுக்காக சோனியா தமிழர்களின் மீது பழிதீர்த்துக் கொள்வதே இந்தப்போர் என்றும்; சிங்கள இனவாதத்தின் உச்சகட்ட வெளிப்பாடே இந்தத் தமிழினஅழிப்புப் போரென்றும்; புலிகளின் சகிப்புத்தன்மையற்ற, ஜனநாயகமற்ற போக்கையும் அவர்கள் செய்த அரசியல் படுகொலைகளையும் கண்டித்தும் அவர்களது தீவிரவாதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடும் பன்னாட்டு அரசுகளால் அங்கிகரிக்கப்பட்டு நடத்தப்படுவதே இந்தப் போரென்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இப்போது நடக்கும் போருக்கான பல காரணங்களில் இவையும் சிலவாக இருக்கலாம். இப்போருக்கு முழுமுதற்காரணம் என ஒன்று உண்டா? அப்படி இருந்தால் அது என்ன? தமிழர்களின் தனிநாடு கோரிக்கை அந்த அளவுக்கு நியாயத்துக்கு ஒவ்வாததா? ஏன் பன்னாட்டு சமூகம் இந்த அளவுக்கு தழிழர் தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிராக இருக்கிறது? தமிழீழ விடுதலைப்புலிகள் அந்த அளவுக்கு மனிதத்தன்மையுள்ள எவரும் வெறுக்கும்படியான அளவுக்குக் கொடூரமான மனிதஉரிமை மீறல்களை இழைக்கும் தீவிரவாதிகளா? ஏன் ஒட்டுமொத்த உலக அரசுகளும் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானதாகவும், முட்டுக்கட்டு ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர்? இலங்கைத் தீவின் நில ஒருமைப்பாடும், அரசியல் இறையாண்மையும் யாரும் தொடக்கூடாத 'புனிதப் பசுவா'? இந்தக் கேள்விகளுக்கு விடைதேடும் முன்னர் நாம் புரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய 'பன்னாட்டு அரசியல் உறவுகள்' குறித்த கருத்துக்கள் உள்ளன. இந்த அடிப்படைப்படைகளைப் புரிந்து கொண்டால் நாம் முதலில் கேட்ட 'இது யாரது போர், எதற்காக இந்தப் போர், ஏன் தமிழர்களுக்கு இந்தப் பரிதாப நிலை, தமிழர்கள் இவ்வளவு சொல்லொண்ணாக் கொடுமைகளையும், நரக வேதனைகளையும், உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடிய அவமானங்களையும் அனுபவிக்க அவர்கள் செய்த பாவம் என்ன? ஆகிய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.

பன்னாட்டு அரசியலையும், நாடுகளுக்கிடையேயான உறவுகள், சண்டைகள், சச்சரவுகள், வணிகம் ஆகிய அனைத்தையும் புரிந்து கொள்ளவும், ஆய்வு செய்யவும் பன்னாட்டு அரசியல் தத்துவ நிபுணர்கள் பல கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் வகுத்துள்ளனர். இவற்றுள் 'பூகோள அரசியல்' என்ற கோட்பாடே உலக நாடுகளின் நடவடிக்கைகளைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவுகிறது என்பது ஆராய்ந்து நிறுவப்பட்ட கருத்து. இதை ஆங்கிலதில் ஜியோபாலிடிக்ஸ் (Geopolitics) என்று அழைக்கிறோம். யார் உலகில் அதிகாரம் செலுத்த முடியும், யார் உலகை ஆள முடியும் என்பதற்கு இந்தக் கோட்பாடு பல அறிஞர்களின் கொள்கைகளை முன்வைக்கிறது. 'யுரேஷிய' நிலப்பகுதியை ஆள்பவர்கள் உலகை ஆள்வார்கள் என்பது ஒரு கொள்கை. இது போன்று பல கொள்கைகள். ஒவ்வொரு நாட்டின் யுத்ததந்திரிகளும் எந்தக் கொள்கை மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அதற்கேற்ப அவர்களது வெளியுறவு மற்றும் இராணுவ உத்திகளை வடிவமைக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியின் எதிர்காலம் ஆசியாதான் என்றான பிறகு 'ஆசியாவை ஆள்பவர்கள் யாரோ அவர்களே உலகை ஆள்வார்கள்' என்ற பூகோளக் கோட்பாடு உறுதியாகி விட்டது. 20-ம் நூற்றாண்டின் பின்பகுதி தொடங்கி 21-ம் நூற்றாண்டிலும் ஆசிய நாட்டில் ஒன்றான சீனாவே அனைவரையும் பிரமிக்கவைக்கும் அளவில் வளர்ந்து தனது பலத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்ட நிலையில் இந்த 'ஆசியக் கட்டுப்பாடு போட்டி' அதிகரித்துள்ளது.

சரி...அதெல்லாம் சரி. பூகோள அரசியலுக்கும், உலகை ஆள்வதற்கும் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவில் உள்ள தமிழர்களுக்கும் என்ன தொடர்பு? தொடர்பே அந்தக் கடலின்தான் உள்ளது. ஆசியாவின் கடல்வழிகளைக் கட்டுப்படுத்துதல் ஆசியாவையே கட்டுப்படுத்துவதற்குச் சமம். கடல்வழிகள் இல்லாமல் உலகப் பொருளாதார ஓட்டத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்ற அளவுக்கு உலகப் பொருளாதாரம் கடல் வாணிக வழிகளோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது. ஆசியாதான் பொருளாதாரத்தின் எதிர்காலம் என்ற பிறகு 'இந்தியப் பெருங்கடலை ஆள்பவர்கள்தான் உலகையே ஆளப்போகிறார்கள். 20-ம் நூற்றாண்டில் அட்லாண்டிக் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தனவோ அதைவிட அதிமுக்கியமானதாக இந்தியப் பெருங்கடல் மாறிவருகிறது. சீனாவிற்குத் தேவையான 90% எரிபொருள், எண்ணெய் மற்றும் தாதுப் பொருள் ஆதாரங்கள் இந்தியப் பெருங்கடல் வழியாகத்தான் செல்கிறது. தமிழர்கள் செய்த பாவமெல்லாம் இந்த உலகப் பொருளாதார இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழியில் தங்கள் வாழ்விடங்களைக் கொண்டிருப்பது தான். இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தாய்த்தமிழகத்து மக்களுக்கும் பொருந்தும். தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்க ஆயத்தமாகும் ஒரு கட்டமாகத்தான் சீனா இலங்கைத்தீவின் விவகாரங்களில் தலையிட ஆரம்பித்திருக்கிறது. தீவு சிங்களர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்தியப் பெருங்கடலைக் கட்டுக்குள் கொண்டுவர துடிக்கும் ஒவ்வொரு உலக நாடும் சிங்கள அரசிற்குப் பொருளாதார சலுகைகளும் இலங்கை இராணுவத்திற்குப் போர்க்கருவிகளும் பன்னாட்டு மன்றங்களில் ஆதரவும் அளித்து வருகின்றன. ஏற்கனவே சீனா தான் செய்யும் இராணுவ பொருளாதார உதவிகளுக்குக் கைம்மாறாக 'ஹம்பன்தோட்டா' துறைமுகத்தை உருவாக்கும் பொறுப்பைப் பெற்றுக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் சீனக் கப்பற்படையை இலங்கைத் தீவின் தென்விளிம்பில் நிலைகொண்டிருக்கக் காணலாம்.

அமெரிக்கர்கள் 1980-களில் இருந்து இலங்கை இனப்பிரச்சனையில் தலையிட ஆரம்பித்தார்கள். அவர்களது திடீர் ஆர்வத்துக்குக் காரணம் திரிகோணமலைத் துறைமுகம் தான். சீனா பொருளாதார வளர்ச்சியில் வேகநடை போட ஆரம்பித்த உடனேயே அமெரிக்க யுத்த தந்திர நிபுணர்கள் எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பெறப்போகும் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தார்கள். டைகோ கார்சியாவில் (இலங்கைக்குத் தெற்கே 1500 மைல் தொலைவில் உள்ள ஒரு மிகச் சிறிய தீவு Diego Garcia) உள்ள அமெரிக்கக் கப்பற்படையின் 15-வது பிரிவு மேற்கண்ட புதிய பொருளாதார மாற்றம் உருவாக்கும் சூழ்நிலையில், அமெரிக்க தேசிய நலன்களைப் பாதுகாக்கப் போதுமானதாக இருக்காது. இதனாலேயே அப்போதைய இலங்கைப் பிரதமர் J.R. ஜெயவர்த்தனே மற்றும் அமெரிக்க அதிபர் ரீகன் ஆகியோருக்கிடையில் திரிகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்கக் கப்பற்படைத் தளத்திற்கு வழங்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. இரஷ்யக் குழுமத்தில் இருந்த இந்தியா இதனைத் தடுப்பதற்காகவே தமிழர் இனப்பிரச்சனையை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை 1987-ல் சிங்கள அரசின் மீதும் தமிழரின் விடுதலைப் போராட்டக் குழுக்கள் மீதும் வலுக்கட்டாயமாகத் திணித்தது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு இரகசிய பிரிவு, இலங்கை இந்தியாவின் அனுமதியின்றி திரிகோணமலைத் துறைமுகத்தை எந்த நாட்டுக்கும் தாரை வார்க்க முடியாது என்று கூறுகிறது. இதன் ஒரு அங்கமாகவே இந்தியா அங்குள்ள எண்ணெய டாங்கர்களையும் நிரந்தரக் குத்தகைக்கு எடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் புஷ்ஷின் 'தீவிரவாத எதிர்ப்புப் போர்' காலம் தொடங்கிய பின் அமெரிக்கர்களின் கவனம் மீண்டும் திரிகோணமலை துறைமுகம் மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்திற்கருகில் உள்ள பலாலி விமானதளத்தின் மீதும் திரும்பியுள்ளது. இவை இரண்டும் தமிழரின் தாயகப் பகுதியில் இருப்பதால் தமிழினப் பிரச்சனை தீராமல் தாங்கள் பயன்படுத்த முடியாது என்பது அமெரிக்காவிற்குத் தெரியும். இதனாலேயே நார்வே மூலமாக சமாதனம் பேசுவதாகக் கூறி போரில் கை ஓங்கியிருந்த விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தை என்று வஞ்சகம் பேசி அழைத்துப் போர் நிறுத்தம் செய்து கடந்த 7 ஆண்டுகளாக புலிகளை ஒழிக்கச் சிங்கள இராணுவத்திற்கு ஆயுதங்களும் பயிற்சியும் அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளின் பொருளாதார மற்றும் ஆயுதம் வாங்கும் அமைப்புகளையும் கடுமையான நடவடிக்கைகள் மூலம் முற்றாக ஒடுக்கி வருகிறது.

இனப்பிரச்சனையை நேர்மையான முறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிகளிடம் பேசி சுமூகத் தீர்வு காணாமல் வன்முறைக்கு மூலகாரணமான இனவெறி அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுத் தங்களது தேசிய நலன்களை உறுதி செய்வதிலேயே ஒவ்வொரு நாடுகளும் குறியாக இருக்கின்றன. உலக அமைதி, மனித உரிமை பாதுகாப்பு ஆகியவற்றிற்காகப் பணியாற்றுவதாக பிதற்றிக் கொள்ளும் உலகளாவிய அமைப்புகள் அனைவரும் பொருளாதார மற்றும் இராணுவ பலமிக்க நாடுகளின் ஏவலாளிகளாகவே செயல்படுகின்றன. கடந்த மாதம் அமெரிக்க இராணுவம் ஹிந்தி மற்றும் தமிழ் பேசுபவர்கள் அமெரிக்க இராணுவத்தில் சேர முன்னுரிமை அளிப்பதாக அறிவித்திருப்பதன் மூலம் அமெரிக்கர்களின் இராணுவ நோக்கம் இப்போது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. அமெரிக்கர்களின் இராணுவத் தலையீடு எவ்வளவு கேடு என்பது ஈராக்கையும், ஆப்கானிஸ்தானத்தையும், பாகிஸ்தானத்தையும் பார்த்தால் தெரியும். தமிழக இளைஞர்கள் விழிப்படைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க நேரமில்லை. ஈழத்தமிழர்களைக் காக்கும் இப்போராட்டம் எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய இன்னும் கடுமையான சூழ்நிலைகளைச் சந்திக்க நம்மைத் தயார் செய்யும் களமாகும். ஈழத் தமிழர்களின் தோல்வி எதிர்காலத்தின் ஒட்டு மொத்தத் தமிழர்களின் தோல்வியாகவே முடியும். ஈழத் தமிழர்களின் போராட்டத்தை வெற்றியடைய வைப்பதே நமது இன்றைய முழுமுதற் கடமையாக இருக்க வேண்டும்.

உலகத்தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்று முழங்குவோம்!

Friday, October 17, 2008

இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ச்சியடையவது ஏன்?

2007 தொடக்கத்திலிருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலும் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக உயர்ந்து வந்தது. ஒரு அமெரிக்க டாலருக்கு 39 சொச்ச ரூபாய் என்ற அளவுக்கு செலாவணி விகிதம் ரூபாய்க்கு சாதகமாக மாறியது. இதனால் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட திருப்பூர் போன்ற ஆயத்த ஆடை மையங்கள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப மென்பொருள் துறை ஆகியவை பெரும் நட்டங்களைச் சந்திக்க வேண்டிய நிலை வந்தது. அதே நேரத்தில் இறக்குமதியைச் சார்ந்திருந்த தொழில்கள் தாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அப்போது குறைய இந்திய ரூபாய்களைச் செலவழிக்க வேண்டிய சாதகமான சூழ்நிலை நிலவியது. ஏனென்றால் ஏற்றுமதியானுலும் இறக்குமதியானாலும் உலக நாடுகள் அமெரிக்க டாலரில் மட்டுமே புழங்குவதை விரும்புகிறார்கள். எனவே நாம் பன்னாட்டு அமைப்பில் தொழில் நடத்த விரும்பினால் முதலில் நம் பணத்தை டாலருக்கு மாற்றியாக வேண்டும். அது போலவே நமக்கும் கிடைக்க வேண்டிய தொகைகள் டாலரிலேயே தரப்படும். இந்திய ரூபாய் டாலருக்கு எதிராகப் பலம் பெற்றதற்கு வளர்ந்து வரும் இந்திய உற்பத்தித் துறையே என்று வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஜூன் வாக்கிலிருந்து இந்த நிலைமை மாறத் தொடங்கியது. பண வீக்கத்தினால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படத் தொடங்கியது. பன்னாட்டுச் சந்தையில் எண்ணை விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் அளவுக்கு அதிகரித்ததே காரணமாகப் பெரும்பாலும் கருதப்படுகிறது. இந்தியா பெரும்பாலனத் தன் எண்ணைத் தேவைக்கு எண்ணை இறக்குமதியையே நம்பியிருப்பதால் அதிகமான டாலர்களைச் செலவழிக்க வேண்டி வந்தது. டாலருக்குத் தேவை அதிகரிக்கும் போதெல்லாம் அந்த ரூபாய்க்கு எதிரான டாலரின் செலாவணி மதிப்பு அதிகரிக்கிறது. இதனால் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு 43, 44 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த நிலையில் தான் அமெரிக்கா தொடங்கி பின்னர் ஐரோப்பா மற்றும் இதர முதலாளித்துவ பொருளாதரங்கள் வாராக்கடன்களாக மாறிய தரம் குறைந்த அடமானக் கடன்கள் (Subprime Mortgage Debts)பாதிக்கத் தொடங்கின. இந்த தரம் குறைந்த அடமானக் கடன்களின் (Subprime Mortgage Debts) மதிப்பு கிட்டத்தட்ட ஏழெட்டு ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும் போலத் தெரிகிறது. ஒரு ட்ரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடியாகும். இந்திய ரூபாயி என்றால் 45 லட்சம் கோடி. அதுவும் ஏழெட்டு 45 லட்சம் கோடிகள். நினைக்கவே தலைசுற்றலாம். ஒட்டு மொத்த இந்தியாவையும் ஆயிரம் நேரம் விற்றாலும் இந்தத் தொகை தேராது. இந்தப் பொருளாதார அவலத்தால் பல் முன்னணியான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் பிச்சைக்காரர்களாயின...அதாவது திவாலாயின. அன்றாடப் புழக்கத்திற்கு யாரிடமும் காசில்லை. வங்கிகள் ஒருவருக்கொருவர் கடன் கொடுக்கவும் தயாராயில்லை. இந்த நிலையில் பன்னாட்டு அரசாங்கங்கள் தங்கள் தங்கள் நாடுகளிலுள்ள வங்கிகள் மற்றும் பிற பொருளாதார நிறுவனங்களை மீட்பதற்கு அரசு கஜானா அதாவது அரசின் மத்திய வங்கிகளிலிருந்து பணம் வழங்க திட்டங்களை அறிவிக்கத் தொடங்கினர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 700 பில்லியன் டாலர்கள் மீட்புத் தொகைத் திட்டத்தை அறிவித்தார். அதற்கு முன்பே கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு சில சொத்து அடமான நிறுவனங்களை அரசுடைமையாக்கச் செலவு செய்தார். இதனால் உலகின் மற்றப் பங்குச் சந்தைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க டாலர்கள் அமெரிக்க மத்திய வங்கிக்குள் வெள்ளமெனப் பாயத் தொடங்கின. இதனால் அனைத்துப் பணங்களுக்கு எதிராகவும் டாலரின் மதிப்பு உயர ஆரம்பித்தது. இந்தியா போன்ற எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள் இதனால் மிகவும் பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளன. அமெரிக்கப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறார். இந்நிலையில் அதிகமான உற்பத்திச் செலவால் இந்திய உற்பத்தித் தொழில்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் அதனையே முழுக்க முழுக்க நம்பியிருக்கும் இந்திய இதனால் இந்திய தகவல் தொடர்பு தொழில்நுட்ப மென்பொருள் துறையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சுற்றுலாத்துறை, விடுதி மற்றும் உணவகங்கள் ஆகிய அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவையனைத்தும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை இந்த ஆண்டும் இன்னும் வரும் ஆண்டுகளிலும் கடுமையாகப் பாதிக்கலாம். இப்போதைக்கு இந்திய தேசிய ஊடகங்கள் மிகவும் மிகைப்படுத்தித் தம்பட்டம் அடித்து வந்த 'அதிவேக இந்திய வளர்ச்சி' என்னும் புராணக் கதை தற்காலிக முடிவுக்கு வந்து விட்டதாகவே தோன்றுகிறது.

Monday, June 16, 2008

'டாடா' பெருச்சாளிகளிடமிருந்து தென் தமிழகத்தைக் காப்போம்!

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு டாடா உருக்காலை நிறுவனத்தின் தலைவர் பி.முத்துராமனும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியும் தென்தமிழகத்தில் (குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டத்தில்)டைட்டானியம் தொழிற்சாலையொன்றை அமைப்பது குறித்து ஒப்பந்தமிட்டார்கள். தமிழக அரசு இதன் முகமாக பத்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களைப் பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தி டாடா நிறுவனத்திற்கு ஒப்படைக்கப் போவதாக அறிவித்தது. அடிமாட்டு விலைக்கு தங்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கித் தொழில் முதலைகளான டாடாக்களிடம் சில கோடிகளை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு கொடுக்கத் துணிந்த அரசின் துணிகரத்தைக் கண்டித்து தென்மாவட்டங்களில் மக்கள் பொங்கி ஆர்ப்பாட்டம் நடத்தத் துவங்கினர்.

மக்களின் உணர்வைப் புரிந்து கொண்ட எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேடும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். அரசியல் வித்தகர் இராமதாசிலிருந்து நேற்று பெய்த மழையில் இன்னைக்கு முளச்ச காளானாகிய விஜயகாந்த் வரை சென்று தாங்கள் மக்கள் பக்கம் என்று காட்டிக் கொண்டனர். கருணாநிதியோ எதிர்ப்பெல்லாம் அதிமுகவுக்கு ஆதரவான மணல் கொள்ளைக்காரனான வி.வி மினரல்ஸ் குழு தலைவன் வைகுண்டராஜன் கூட்டத்தினரால் தூண்டிவிடப்பட்டது; மற்றபடி மக்களெல்லாம் திட்டத்துக்கு ஆதரவுதான் என சப்பைக்கட்டு கட்டிப் பார்த்தார். ஆனால் எடுபடவில்லை. மக்கள் போராட்டம் அரசுக்கு எதிராக வெடிக்கும் நிலை உருவாக, மக்கள் கருத்து அறிந்த பிறகுதான் எதுவோம் செய்வோம் அதுவரை அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்தி வைக்கிறோம் என்று அறிவித்தார் (மேற்கு வங்கத்தின் சிங்கூர், நந்திகிராம் மற்றும் ஒரிசாவின் கலிங்கநகர் போராட்டங்கள் மற்றும் படுகொலைகள் கருணாநிதிக்கு கதிகலங்க வைத்திருக்க வேண்டும்; சாகிற சமயத்தில் மக்களை வெளிப்படையாக்ப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லையோ போலும்).

டாடா உருக்காலை தலைவர் பி. முத்துராமனோ, தூத்துக்குடியில் டைடானியம் ஆலை நிறுவுவதை ஏதோ பெரிய 'தொண்டு நிறுவனம்' அமைப்பது போல அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். தென்தமிழகம் பொருளாதாரரீதியாகப் பிற்பட்டு இருப்பதாகவும், அதனால் டாடா நிறுவனம் இந்த ஆலையை இங்கு அமைப்பதாகவும் அளக்காமல் அள்ளி விட்டுக்கிட்டிருந்தார் (இன்னமும் இக்கதையை சில பொறுக்கிகள் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்). பின்னர் தமிழக அரசு பின்வாங்கி அரசு நிலக் கையகப்படுத்தலில் ஈடுபடாது எனவும் அது டாடாவின் தலைவலி எனவும் கூறிக் கருணாநிதி தன் கையைக் கழுவினார். பொது மக்கள் சிலர் ஏக்கருக்கு 5 லட்சம் கொடுத்தால் தங்கள் நிலத்தைக் கொடுக்கத் தயார் என்று கூற முத்துராமனோ ஏக்கருக்கு ஐம்பதாயிரத்துக்கு மேல் சல்லிக்காசு கூடக் கொடுக்க முடியாது; அவர்க்ள் என்ன தங்கத்தின் மேல் உட்காந்திருக்கிறார்கள் என்ற நினைப்பா? வேண்டுமானால் அந்த மணலை அவர்களே வைத்துக் கொள்ளட்டும் என வீராப்புப் பேசினார். முதலாளித்துவத்தின் திமிர் எப்படி தாண்டவமாடுகிறது பாருங்கள். ஒரு ஏக்கர் 50 கோடிக்குக் குறையாமல் போகும் காலத்தில் டாடா கனிமவளம் மிக்க்ப் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை 50 கோடிக்குக் கேட்கிறது. கேட்கிறவன் கேணையனா இருந்தா கேப்பையில நெய்யி வடியுதுன்னு கூட சொல்லலாம்....அப்படிங்கிற மாதிரிதான் நம்மவர் கதை இருக்கிறது. உண்மையிலேயே தென்தமிழக மக்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்கும் நோக்கத்தோடு வந்திருந்தால் நிலங்களைப் பிடுங்கி அவர்களை ஓட்டாண்டி ஆக்குவானேன்? வெட்டுகின்ற கனிமத்திற்கு 'உரிமத் தொகை' அதாவது ராயல்டி கொடுத்து விட்டுப் போக வேண்டியது தானே. வியாபாரம் என்றால் வியாபாரம் பேசாமல் பெரிய பரோபகாரம் பண்ணுவான் போல் பீத்திக் கொள்வானேன்?

உண்மை என்னவென்றால், டைட்டானியம் ஒரு அரிய கனிம வகையைச் சார்ந்தது. டைட்டானியம் இயற்கையிலேயே கடல் இயக்கத்தால் தென்தமிழகக் கடற்கரையில் இடைவிடாமல் குவிந்து வருகிறது. அதனால் தென் தமிழகத்தைத் தவிர இந்த ஆலையை அமைப்பதற்கு உலகத்திலேயே சிறந்த இடம் வேறு இல்லை. அதே நேரத்தில், டைடானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் தொழிற்சாலைகள் சுற்றுப்புறச் சூழலை மிகவும் மாசுபடுத்திப் பாழ்படுத்தக் கூடியவை. அப்பகுதியில் வாழும் மக்கள் பல நோய்களுக்கு ஆளாவார்கள். இவற்றைத் தடுக்க வேண்டுமானால் நிறையப் பணம் செலவழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க வேண்டும். ஆனால் பணப் பேராசை பிடித்த பெருந் தொழில் முதலாளிகள் அரசாங்கத்தை லஞ்சம் கொடுத்துச் சரிகட்டி சுற்றுப்புறத்தை மனிதர்கள் வாழ வகையற்றதாக மாற்றி விடுவார்கள். இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளெல்லாம் வளர்ந்த நாடுகளில் செல்லுபடியாகாதென்பதால் தமிழர்கள் போல இளிச்சவாயர்கள் இருக்கும் இடத்தைத் தேடி பார்சிக்களும் பனியாக்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டெரிலைட் தூத்துக்குடி வந்த கதையும் இப்படித்தான். அமெரிக்காவில் டைட்டானியம் ஆலை நடத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்திய 'டூ பான்ட்' நிறுவனத்தின் மீது இன்றளவும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற மேற்கத்திய நிறுவனங்கள் டாடா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற புல்லுருவிகளின் துணையால் தமிழ்நாட்டைக் காடாக்கத் துணிந்து விட்டார்கள்.

தென்தமிழகத்தில் யாரும் டாடா டைடானியம் ஆலை வரவில்லையென்றால் செத்துப் போய்விட மாட்டார்கள். முதலில் தென்தமிழ்நாடு பின்தங்கியது என்பது தவறான கணிப்பு..இல்லை..தப்புக் கணக்கு. தமிழகத்திலேயே அதிக கல்வி விழுக்காடு அதிக தொழில்நுட்ப மாணவர்கள் மற்றும் சிறந்த பொது சுகாதாரம், விழிப்புணர்வு என எல்லாவற்றிலும் முன்னேறியது தென்தமிழகம். டாடா போன்ற பெரிய 'வெங்காய' தொழிற்சாலைகள் இல்லையென்பதால் பின்தங்கியது என்பது மடத்தனம். அப்படிப் பார்த்தால் பெரும்பாலான டாடா ஆலைகள் இருக்கும் பீகாரும், ஜார்க்கண்டும் அல்லவா முன்னேறிய மாநிலங்களாக இன்று இருக்க வேண்டும்!!! அவற்றின் நிலைமை என்ன என்று எல்லாருக்கும் தெரியும்.

இப்போது மீண்டும் நிலம் கையகப்படுத்துவதில் உதவிசெய்யக் கோரி டாடா தமிழக அரசை அணுகியிருக்கிறது. வேண்டுமானால் உங்கள் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் தூத்துக்குடியில் தொடங்குங்கள் என்று சொல்வதிற்கில்லாமல் கருணாநிதியும் அவர்களுக்குத் தலைவணங்கி இந்த நிலம் பிடுங்கிகளுக்கு உதவி செய்யும் படி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளளார்.

தென்தமிழ் நாட்டு மக்கள் செருப்படி கொடுத்து ஓட ஓட முடுக்கி விட்டால் தான் இந்தக் கொள்ளைக் கும்பல் ஓட்டம் பிடிக்கும்!! அந்த நாள் மிகத் தொலைவில் இல்லை.